ad

Agrahara Insurance benefits for pensioners in Sri Lanka - Guide in Tamil



2016.01.01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றுக்கொண்டு ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் நலன்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக 2021.11.05 ஆம் திகதியன்று ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

இந்த அறிவித்தல் குறித்து ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் ஒரு வகையான தௌிவின்மை காணப்படுவதால் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட அக்ரஹார காப்புறுதித் திட்டம் குறித்த பூரண விளக்கத்தினை இந்தப் பதிவின் ஊடாக தருவதற்கு முயற்சிக்கின்றோம்.



அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை : 12/2005(IX) - ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் குறித்த சுற்றுநிருபம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்து.

விபரம் பெற கீழுள்ள லிங்கில் கிளி்க் செய்யவும்.





பின்னனி.

அரச ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்று அரச நிர்வாகச் சுற்றுநிருபம் 05/97 இன் புிரகாரம் 1997.01.01 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தக் காப்புறுதித் திட்டமானது

01. மருத்துவக் காப்புறுதித் திட்டம் (. Medical Insurance Scheme,) . 02.. தனிநபர் திடீர் விபத்துக்கள் மற்றும் இயற்கை மரணங்கள் தொடர்பான காப்புறுதி ( Personal Accident and Natural Death Insurance Scheme) 03. கடன் உறுதியளிப்புக் காப்புறுதி. ( Loan Guarantee Scheme)

என்ற அடிப்படையில் நலன்களை வழங்கி வந்தது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டு பல வருடகாலங்கள் செயற்படுத்தப்பட்டுவந்த இந்த காப்புறுதித் திட்டத்தில் 2005 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவொன்றின் ஊடாக அங்கத்தவர்களுக்கு நலன்களை அதிகரிக்கும் நோக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் ஒருவரது மாதாந்த பங்களிப்புத் தொகையாக ரூபா 75 அறவிடப்பட்டதுடன் அது காலப் போக்கில் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ 125 அரவிடப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக மாதாந்தம் 300 ரூபா பங்களிப்புச் செய்கின்ற அடிப்படையில் வௌ்ளித் திட்டம் (SILVER) இதற்கு மேலதிகமாக மாதாந்தம் 600 ரூபா பங்களிப்புச் செய்கின்ற அடிப்படையில் தங்கத்திட்டம்  (GOLD)  என்ற அடிப்படையில் அங்கத்தவர்களின் சுய விருப்பத்தின் பேரில் பங்களிப்புச் செய்வதற்கான முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




இது தொடர்பான மேலதிக விபரம் அவசியப்படுகின்றவர்கள் கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்து அக்ரஹார குறித்து எழுதப்பட்ட விளக்கக் கட்டுரையின் ஊடாக தெரிந்துகொள்ளலாம். 



 (ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களுக்கான திட்டத்தில் வௌ்ளித் திட்டம் (SILVER) தங்கத்திட்டம்  (GOLD)  என்பன இல்லை என்பதனைக் கவனத்தில்கொள்ளவும்.)

இவ்வாறு காலத்துக்குக் காலம் மாற்றங்கள் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்தக் காப்புறுதித் திட்டம் தொடர்பில் 2017.10. 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்று நிருப இலக்கம் 12/2005 (VII) இன் ஊடாக அக்ரஹார திட்டத்தின் கீழ் அரச சேவையில் இருக்கின்றவர்கள் பெற்றுக்கொள்கின் நலன்களை ஓய்வு பெற்றுள்ளவர்களுக்கும் அடையச் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களிடமும் மாதாந்த தொகை ஒன்றினைப் பெற்று அவர்களுக்கும் இந்த அக்ரஹார காப்புறுதியின் நலன்களை வழங்குவதற்காக தீர்மானிக்கப்பட்டு குறித்த திட்டம் 2016.01.01 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்று மற்றும் பெறுகின்றவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது.


2017.10. 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட 12/2005 (VII) ஆம் இலக்க சுற்று நிருபத்தனைப் பார்வையிடவும் பதிவிறக்கம் செய்யவும் கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்


அதனை அடுத்து தற்போது 2021.10.29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின் ஊடாக 2016.01.01 ஆம் தகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்தத் திட்டத்தின் நலன்கள் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் திட்டானது இன்னும் விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இந்தத் திட்டம் தொடர்பாக அரச நிர்வாக சுற்றுநிருபம் மற்றும் ஓய்வூதியத் திணைக்களம் என்பன என்ன குறிப்பிடுகின்றது என்பது தொடர்பான விளக்கத்தினையும் காப்புறுதியின் நலன்கள் குறித்த விபரங்களையும் அதற்காக நீங்கள் செலுத்தவேண்டிய பங்களிப்புத் தொகை குறித்த விபரங்களையும் இந்தத் திட்டத்திலிருந்து நீங்கள் நீங்கிக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் இந்தக் கட்டுரையில் தரவிருக்கின்றோம்.

எனவே அவசரப்படாமல் இந்தக் கட்டுரையினை முழுமையாக வாசித்து தொடர்ந்தும் இந்தத் திட்டத்தில் இருப்பது பயனுள்ளதா என்பது குறித்து ஆரய்ந்து இந்தத் திட்டத்திலிருந்து விலகிக்கொள்வது குறித்து தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு லங்காஜொப் இணையத்தளம் உங்கள் அனைவரிடமும் வேண்டிக் கொள்கின்றது.

அக்ரஹார திட்டம் குறித்து ஓய்வூதியத் திணைக்கள் விடுக்கும் அறிவித்தல்.

2016.01.01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றுக்கொண்டு ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் நலன்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஓய்வூதியத் திணைக்களம் விடுக்கின்ற அறிவித்தல்.
2016.01.01 ஆம் திகதியின் பின்னர் ஓய்வு பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்ற அக்ரஹார காப்புறுதித் திட்டத்தின் நலன்களை 2016.01.01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றுக்கொண்டவர்களுக்கும் வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் இதுவரை காலமும் வழங்கப்படுகின்ற அக்ரஹார நலன்களை மேலும் விருத்தி செய்வதற்காக 2020.07.22 மற்றும் 2021.08.30 ஆகிய தினங்களில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி கிடைக்கபெற்றுள்ளது.

02. குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அரச நிர்வாக அமைச்சினால் 2021.10.29 ஆம் திகதி 12/2005 (VIII) ஆம் இலக்க சுற்றும் வௌியிடப்படுள்ளது. குறித்த சுற்று நிருபத்தின் அடிப்படையில் 70 வயதுக்குக் குறைந்த ஒய்வு பெற்ற உத்தியோகத்தர்களிடமிருந்து ரூபா 400 மாதாந்தப் பங்களிப்புத் தொகையினையும், 70 வயதிலும் கூடிய ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களிடமிருந்து ரூபா 600. மாதாந்தப் பங்களிப்புத் தொகையினையும் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

03. ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களிடமிருந்து மாதாந்தப் பங்களிப்புத் தொகையினை ஓய்வூதியத் திணைக்களம் ஊடாக திரட்டி மாதாந்தம் அந்தத் தொகையினை தேசிய காப்புறுதி நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
04. அரச மற்றும் மாகாண சேவைக்குரிய அனைத்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களுக்காகவும் குறித்த காப்புறுதி நலன்கள் வாழ்நாள் முழுவதுக்கும் உரித்துடையதாகும். இந்தத் திட்டத்தின் ஊடாக குறித்த ஓய்வு பெற்ற உத்தியோகத்தருக்கு மாத்திரம் நலன்கள் வழங்கப்படும் என்பதும் குறித்த நலன்கள் அவரது வாழ்க்கைத் துணைவருக்கோ, பிள்ளைகளுக்கோ, விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கோ இழப்பீடுகள் பெற்றுக்கொள்ள உரிமை இல்லை.

05. அதன் அடிப்படையில் இந்த காப்புறுதித் திட்டத்திற்காக நீங்கள் பங்களிப்புத் தெகயைினைச் செலுத்தி நலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்பாதவிடத்து இந்தத் திட்டத்தில் நீங்கள் இணைவதில்லை என்பதனை 2021.11.15 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு அல்லது பிரதேச செயலாளர் காரியாலயத்தில் அமைந்துள்ள ஓய்வூதியப் பிரிவுக்கு அறிவித்தல் வேண்டும்.

06. அது குறித்த அறிவுறுத்தல்கள் 2021.11.05 ஆம் திகதி வௌியிடப்பட்ட 4/2021 இலக்கமிடப்பட்ட சுற்றுநிருபத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் கீழ்க்குறிப்பிடும் ஏதாவது ஒரு முறையில் உங்களது விருப்பமின்மையினைத் தெரிவிக்கலாம்.

a) ஓய்வூதிய சுற்று நிருப இலக்கம் 04/2021 இன் 02 ஆவது இணைப்பில் தரப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தினைப் பூரத்தி செய்து பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கோ அல்லது ஓய்வூதியத் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திற்கோ கையளிக்கலாம்.
குறித்த விண்ணப்பத்தின் தமிழ் மூலப் பிரதியை PDF வடிவில் பெற்றுக்கொள்ள கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.
b) ஓய்வூதியத் திணைக்களத்தின் www.pensions.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தத்தில் பிரவேசித்து அங்குள்ள Public Services என்பதில் கிளிக் செய்து அதன் ஊடாக உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்தி உள்நுழையவும். அதன் பின்னர் அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் மெனு என்பதனை கிளிக் செய்யும் போது அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஓய்வூதியத் திட்டத்திற்கு விருப்பமின்மையைத் தெரிவித்தல் என்பதனைக் கிளிக் செய்ய வேண்டும் அப்போது ஒரு இலக்கம் உங்களது தொலைபேசிக்கு SMS ஊடாகக் கிடைக்கப்பெறும் அந்த OTP இலக்கத்தினை உட்செலுத்தி உறுதி செய்யும் போது குறித்த அக்ரஹார திட்டத்திலிருந்து நீங்கள் நீங்கிக்கொள்ளலாம்.




c) காப்புறுதியினைப் பெறுவதற்கு தகைமைய உடையவர்கள் என கருதப்படுபவர்களுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தினால் அனுப்படுன்ற குறுந் தகவலுக்கு (SMS ) இற்கு NO என்பதாகப் பதில் அனுப்புவதன் ஊடாகவும் விருப்பமின்யினைத் தெரிவிக்கலாம். இந்த சந்தர்ப்பத்திலும் ஒரு இரகசிய இலக்கம் உங்களது தொலைபேசிக்கு SMS ஊடாகக் கிடைக்கப்பெறும் அந்த OTP இலக்கத்தினை உட்செலுத்தி உறுதி செய்யும் போது குறித்த அக்ரஹார திட்டத்திலிருந்து நீங்கள் நீங்கிக்கொள்ளலாம்.




ஓய்வூதியத் திணைக்களத்தின் 04/2021 ஆம் இலக்க சுற்று நிறுகம் சிங்கள மொழியில் மாத்திரமே வௌியாகியுள்ளது அதன் விபரங்கள் இந்தப் பதிவில் தரப்பட்டுள்ளது சிங்கள மொழியிலான சுற்றுநிருபத்தினை கீழுள்ள லிங்கில் பார்வையிடலாம்

இந்தக் காப்புறுதித் திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியுமான நலன்கள் குறித்த விபரங்களைக் கீழே தருகின்றோம்.

01. தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெறல்.

• அறைக் கட்டணமாக ரூபா.30,000/-

(தினமொன்றிற்கு ரூபா.3,000/- என்ற வீதம் அதிகபட்சம் 10 நாட்களுக்கு)

• மருந்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் தாதியர் செலவுகள் ரூபா.50,000/-

• மருத்துவக் கட்டணம் ரூபா.20,000/-

* மருத்துவப் பரிசோதனைகளுக்கு ரூபா.20,000/-

பெற்றுக் கொள்ளக்கூடிய நலன்கள் அதி கூடிய பெறுமதி 120,000/- (ஒரு நிகழ்வுக்கு)


02. தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது

• அறைக் கட்டணமாக ரூபா.10,000/- (தினமொன்றிற்கு ரூபா.1,000/- என்றவீதம்

அதிகபட்சம் 10 நாட்களுக்கு)

• மருந்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் தாதியர் செலவுகள் ரூபா.35,000/-

• மருத்துவக் கட்டணம் ரூபா.15,000/-

• மருத்துவப் பரிசோதனைகளுக்கு ரூபா.15,000/-

வருடம் ஒன்றிற்கு பெற்றுக்கொள்ள முடியுமான ஆகக் கூடிய அளவு ரூபா. 75,000/-


(தனியார் ஆயுர்வேத மருத்துவமனை சுதேச மருத்துவத்திற்கு பொறுப்பான அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். தனியார் ஆயுர்வேத நிறுவனங்களிலிருந்து எடுக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு செலுத்தப்படுவதில்லை.)

03. அரசாங்க மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறப்படுமாயின் (ஒரு தடவைக்கு அதிகபட்சம் 10 நாட்களுக்காக தினமொன்றிற்கு)

ரூபா.500/- என்ற விகிதத்தில் (வருடமொன்றிற்கு அதிகபட்சம் 20 நாட்களுக்கு மாத்திரம்) என்ற அடிப்படையில் வருடத்திற்கு 5,000/- வரை இழப்பீடு பெறலாம்.

(தங்கியிருந்த காலப்பகுதிக்கு உரித்தாக மாத்திரம் விலைப் பட்டியல் மீள்நிரப்பப்படும் என்பதோடு, அதற்காக மருத்துவ பரிந்துரைகள் மற்றும் விலைப் பட்டியலின் மூலப் பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)


(ஆ) அரசாங்க மருத்துவமனை (கட்டணம் செலுத்தும் வாட்டுக்களுக்கு)

  • அறைக் கட்டணம் ரூபா.10,000/-
        (தினமொன்றிற்கு ரூபா.1,000/- என்றவீதம் அதிகபட்சம் 10 நாட்களுக்கு)

  • மருந்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் தாதியர் செலவுகள் ரூபா.35,000/-
  • மருத்துவக் கட்டணம் ரூபா.15,000/-
  • மருத்துவப் பரிசோதனைகளுக்கு ரூபா.15,000/-

04 அரசாங்க ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறப்படுமாயின் (ஒரு நாளுக்கு ரூபா.500/- என்ற விகிதத்தில் அதிகபட்சம் 10 நாட்களுக்கு ) 5,000/-

(வருடமொன்றிற்கு அதிகபட்சம் 20 நாட்களுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்படும்)

05 கண்புரை அறுவை சிகிச்சை (லென்ஸ் செலவுகள் உட்பட) 25,000/-

குறிப்பு: மேலே 01 தொடக்கம் 05 வரையான நிகழ்வுகளுக்கான உச்ச எல்லைகளுக்கு அமைய காப்புறுதி உறுப்பினரின் உரிமைகோரல் எல்லை ஆண்டுக்கு அதிகபட்சம் ரூபா.150,000/- ஆகும்.

இவை தவிர கீழ் வரும் இழப்பீடுகள் ஆயுள் காலத்தில் ஒரு முறை மாத்திரம் மீள்நிரப்பக்கூடிய விசேட நலன்கள் வழங்கப்படுகின்றது.

  • Critical Heart Surgeries (including by-pass and angioplasty) இதயத்துடன் தொடர்பான பிற சத்திர சிகிச்சைகளுக்கு 500,000/-
  • Implanting pacemaker - Single 150,000/-
  • Implanting pacemaker - Double 300,000/-
  • RF Ablation 225,000/-
  • சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு 500,000/-
  • மூளை அறுவைச் சிகிச்சைக்கு 500,000/-
  • கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு 500,000/-
ஒரு தனியார் மருத்துவமனையில் செய்யப்படும் இதயம், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சைகளுக்கான செலவுகளை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தால் நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்த முடியும். அத்தகைய சந்தர்ப்பத்தில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியிலிருந்து பிணை உத்தரவாதக் கடிதம் பெறப்படல் வேண்டும்.

மேற்படி அறுவைச் சிகிச்சைகள் தவிர்ந்த ஒரு தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சைகளுக்கான செலவுகளை செலுத்துவதில் நலன் காப்புறுதித் திட்ட இலக்கம் 01 இற்கு ஏற்ப மீள்நிரப்பப்படும்.

  • புற்று நோய்க்காக 200,000/-
  • செவிப்புலன் கருவிகளுக்கு 50,000/-

(ஆயுட்காலத்திற்கும் ஒரு தடவை மாத்திரம்)

மேற்படி நலன்கள் அனைத்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் போது மாத்திரமே வழங்கப்படுவதுண்டு என்பதனைக் கருத்தில்கொள்ளவும்.


திருத்தியமைக்கப்பட்ட அக்ரஹார பராமரிப்பு ஓய்வூதியக் காப்றுதித் திட்டத்திற்கு உரித்தான நிபந்தனைகளும் நியதிகளும் என்பதாக குறித்த சுற்று நிருபத்தில் கீழ் வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

1. அரச மற்றும் மாகாண அரச சேவைக்குரிய சகல ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் இக்காப்புதிறுத் திட்டம் உரித்துடயதாகும்.

2. திருத்தியமைக்கப்பட்ட இக்காப்புறுதித் திட்டத்தின் மூலம் 70 வயதுக்குக் குறைந்த ஓய்வூதியம் பெறுநர்களுக்கு மாதாந்த தவணைக் கட்டணமாக ரூபா.400/-ம், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுநர்களுக்கு மாதாந்த தவணைக் கட்டணமாக ரூபா.600/- என்ற வகையில் நடைமுறைப்படுத்தல்.

3. ஓய்வூதியம் பெறுநர்களின் ஆயுட்காலம் பூராகவும் இக்காப்புறுதி நலன்கள் உரித்தாகும்.

4. ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்புத் தொகை ஓய்வூதியத் திணைக்களத்தினால் அறவிடப்பட்டு மாதாந்தம் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துக்கு வழங்கப்படும்.

5. ஓய்வூதியம் பெறுநர்களுக்கு மாத்திரம் இக்காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகள் கிடைக்கப்பெறும் என்பதோடு, அவர்களின் வாழ்க்கைத் துணைக்கு, அநாதைகளுக்கு அல்லது அங்கவீன பிள்ளைகளுக்கு நலன்கள் உரித்தாவதில்லை.

6. ஓய்வூதியம் பெறுநரின் வாழ்க்கைத் துணை, தற்போது அரச சேவையில் ஈடுபடுபவராயின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது ஓய்வூதியம் பெறுநருக்கு மாத்திரம் இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் உரிமை கோருதல் ஏற்புடையாகும்.

7. தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஓய்வூதியம் பெறுநர்களுக்கான விண்ணப்பப்படிவம் இக்காப்புறுதி முன்மொழிவுத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுநர்களினால் தமது நலன்களைப் பெறுவதற்கு பயன்படுத்த முடியும் என்பதோடு, அங்கத்தவர்களால் நலன் பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் உண்மையானதும் சரியானதுமென பிரிவின் கிராம உத்தியோகத்தரின் மூலம் சான்றுப்படுத்தப்பட்டு, மருத்துவமனையிலிருந்து வெளியேறிய தினம் முதல் 90 நாட்களினுள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துக்கு அனுப்புதல் வேண்டும்.

(அ) தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும் போது

(i) நோய் நிருணய அட்டையின் சான்றுப்படுத்திய பிரதி.

(ii) மருத்துவமனையினால் வழங்கப்பட்ட இறுதி விலைப்பட்டியலின் மூலப் பிரதிகள்.

(iii) பணம் செலுத்தப்பட்டமைக்கான பற்றுச்சீட்டுக்களின் மூலப் பிரதிகள்.

(ஆ) அரச மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெறும் போது

(i) நோய் நிருணய அட்டையின் சான்றுப்படுத்திய பிரதி.

(ii) மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தில் வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மருந்துச் செலவுகளுக்கு உரித்தான மருந்து விளக்க விவரப் பட்டியல் (Prescription) மற்றும் பற்றுச்சீட்டின் மூலப் பிரதிகள்.

8. ஒரு தனியார் மருத்துவமனையால் செய்யப்படும் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சைகளுக்கு பிணை உத்தரவாதக் கடிதம் பெறப்பட்டால், பின்வரும் ஆவணங்களை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

(i) பயனாளியிடமிருந்து பிணை உத்தரவாதக் கடிதத்தைப் பெறுவதற்காக தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியிலிருந்து கோரிக்கைக் கடிதம்.

(ii) பிரிவின் கிராம உத்தியோகத்தரின் மூலம் சான்றுப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவம்.

(iii) சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரியால் சான்றளிக்கப்பட்டு தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் மற்றும் தனியார் மருத்துவமனை வழங்கிய மதிப்பீட்டுக் கடிதம்.

(iv) கிராம உத்தியோகத்தரினால் சான்றுப்படுத்தப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டையின் பிரதி.

(v) கிராம உத்தியோகத்தரினால் சான்றுப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரதி.

(vi) உரித்துடைய பணத்தை நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்த பயனாளியின் உடன்பாட்டினை தெரிவிக்கும் கடிதம்.


பின் குறிப்பு - அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களே! நீங்கள் எந்த அடிப்படையிலான வாழ்க்ககைத் தரத்தில் இருப்பவராக இருந்த போதிலும் ஓய்வு பெற்றுருக்கின்ற காலங்களில் ஆதரவற்ற நிலையில் ஏற்படுமாயின் மேற்படி திட்டத்தின் ஊடாக கிடைக்கின்ற சலுகைகள் உங்களுக்கு ஆதரவாக அமையுமா என்பது குறித்து சற்று கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு முடிவெடுப்பதற்கு உதவியாக அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய சாரதி ஒருவரின் வாழ்கையில் நடந்த சம்பவத்தினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

அவர் அரச சேவையில் இணைந்து 30 வருடம் கடந்து விட்ட நிலையில் ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளே இருக்கின்ற நிலையில் (இரண்டு வருடங்கள் என நினைக்கின்றேன்.) அக்ரஹார கோல்ட் காப்புறுதித் திட்டத்தில் இணைந்தார். அதற்கான பங்களிப்புத் தொகையாக மாதாந்தம் ரூபா 600 வீதம் மாதாந்தச் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்டு வந்தது. சுமார் 6 மாதங்கள் இவ்வாறு கழிக்கப்பட்ட நிலையில் தீடீரென அவருக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இதயத்திற்குச் செல்கின்ற சில இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கைகள் குறிப்பிடுவதாக மருத்துவர்கள் அவருக்கு அறிவித்தனர். உடனடியாக இரத்தக் குழாய்களுக்கு ஸ்டென்ட் பொறுத்த வேண்டும் என்பதாகவும் குறிப்பிடப்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதித்து குறித்த சிகிச்சையை மேற்கொண்டார். சிகிச்சைக்கான மொத்த செலவு ஒன்பது இலட்சம் ரூபாவை அக்ரஹார நிறுவனம் நேரடியாக வைத்தியசாலைக்குச் செலுத்தியது. அவர் இப்போதும் ஆரோக்கியமாக இருக்கின்றார்.

இந்த காப்புறுதித் திட்டத்தில் இணையாமல் இருந்திருந்திருந்தால் தனக்கு என்ன நிகழ்ந்நிருக்கும் என்பதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்றவர்கள் என்ற வகையில் உங்களுக்கு 900,000 ரூபா கிடைத்துவிடப்போவதில்லை என்றாலும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக 500,000 வரையில் கிடைக்கப்பெறும் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் நீங்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது 150,000 ரூபா வரை வருடம் ஒன்றிற்கு இழப்பீடு பெறலாம். அத்துடன் ஆயுளில் ஒரு முறை பெறக்கூடிய பல இழப்பீடுகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே குறித்த சுற்று நிருபத்தை திரும்ப வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு 15 ஆம் திகதி வரையில் கால அவகாசம் இருக்கின்றது. இந்தத் திட்டம் குறித்து அடுத்தவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதனை விட இந்தத் திட்டத்தில் நீங்கள் எவ்வாறு பயன்பெறப்போகின்றீர்கள் என்பதுவே முக்கியமானது. எனவே நீங்களாகவே ஒப்பிட்டு முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தத் திட்டமானது யாரோ ஒரு நோயாளிக்காக எமது பங்களிப்பினை வழங்குகின்றோம் என்பதே எனது கருத்து. அதாவது நாங்கள் செலுத்தின்ற ஒவ்வொரு ரூபாவும் யாரோ ஒரு நோயாளரின் நோயைத் தீர்த்து வைக்கின்றது. அதே நேரம் எதிர்பாராத நிலையில் எனக்கு வருக்கின்ற நோய்க்காக யாரோ பலர் தங்களது மாதச் சம்பளத்தில் பங்களிப்புச் செய்கின்றனர். எனக்கு நோய்கள் ஏதும் ஏற்படாத நிலையில் அல்லது நான் மருத்துவ மனையில் அனுமதிக்காதவரையில் எனக்கு இழப்பீடுகள் கிடைப்பதில்லை. நான் இது வரையில் நோய்வாய்ப்படவில்லை என்பதால் இதுவரையில் எந்த இழப்பீடுகளையும் பெறவில்லை என்பதாக யாராவது கூறுமிடத்து. யாரோ ஒருவரின் அல்லது பலரின் நோயைத் தீர்ப்பதற்கு எனது மாதச் சம்பளத்திலிருந்து ஒரு தொகை செலவிடப்படுவதால் அந்தப் புன்னியம் என்னை நோயில் இருந்து பாதுகாத்திருக்கலாமல்லவா?

அரச சேவையில் நேரம் காலம் பாராமல் நாட்டுக்காக பணியாற்றி ஓய்வில் இருக்கும் உங்களது ஆரோக்கியமான வாழ்வுக்காக என்றும் பிரார்த்திக்கின்றோம்.

(இந்தக் கட்டுரையின் உரிமை www.lankajobinfo.com இணைத்தளத்திற்கு உரியதாகும். தயவு செய்து இந்த ஆக்கத்தை அனுமதியின்றி வேறு இணையத்தளங்களில் பிரசுரிக்கவேண்டாம்.)