தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்துவதற்கான நியதிகள் உள்ளடக்கப்பட்ட ஓய்வு பெறுவதற்கான ஆகக் குறைந்த வயது தொடர்பான சட்டமூலம் மற்றும் தொழிலாளர்களின் சேவையினை முடிவுறச் செய்வதற்கான (திருத்திய) சட்மூலம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
இந்த இரண்டு சட்டமூலங்களும் பாராளுமன்றத்தில் கடந்த 11 ஆம் திகதி திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன குறித்த இரண்டு சட்டமூலங்களிலும் இன்று கையொப்பமிட்டதன் பின்னர் அவை அமுலுக்கு வந்தது.
ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான ஆகக் குறைந்த வயது தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 வரையில் உயர்த்துவதனை நோக்காக் கொண்டிருக்கின்றது.
விசேடமாக இதுவரை காலமும் தனியார் துறையில் சேவையாற்றி வந்த பல ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறுவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை இருக்கவில்லை. வேலை வழங்குபவர் வேலைக்கு அமர்த்தப்படுபவர் ஆகியோருக்கிடையே காணப்படுகின்ற சேவை உடன்படிக்கையில் குறிப்பிடப்படுகின்ற பிரகாரமே இதுரைகாலம் ஓய்வு பெறும் வயது கணிக்கப்பட்டது என்பதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தின் ஊடாக EPF இற்கு பாதிப்பு ஏற்படுமா?
இந்த தீர்மானத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதி சம்பந்தமான பலவிதமான அபிப்பிராயங்கள் ஊழியர்கள் மத்தியல் தோன்றியிருக்கின்றன.
ஓய்வு பெறுகின்ற ஆகக் குறைந்த வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் ஊழியர் சேமலாப நிதிய சட்டமைூலத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்பதாக தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
யாரேனும் ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுமிடத்து அவருக்கு ஓய்வு பெறும் தினத்திலிருந்து ஊழியர் சேமலாப நிதியினைப் பெறமுடியும் என்பதாக அவர் தெரிவித்தார்.
"EPF சட்டமூலத்திற்கு அமைய ஆண் ஒருவர் 55 வயதாகும் போதும் பெண் ஒருவர் 50 வயதாகும் போதும் சேவையிலிருந்து நீங்கி ஊழியர் சேமலாப நிதியினைப் பெற்றுக்கொள்ளலாம். EPF சட்டமூலத்தில் எந்த விதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. நீங்கள் 55 வயதில் சேவையிலிருந்து நீங்குவீர்களானால் 55 வயதில் ஊழியர் சேமலாப நிதியினைப் பெறலாம், 56 வயதில் சேவையிலிருந்து நீங்குவீர்களானால் 56 வயதிலேயே EPF பெற முடியும்.
அத்துடன் ஒருவர் 55 வயதில் சேவையிலிருந்து EPF கொடுப்பனவுகளுடன் சேவையிலிருந்து நீங்கிக்கொள்ளலாம். அதன் பின்னர் அந்த நிறுவனம் விரும்புமாயின் மீண்டும் அதே நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைந்து புதிய ஊழியர் பதிவிலக்ததில் 5 வருடங்கள் சேவையாற்றலாம், அந்த சேவையிலிருந்து ஓய்வு பெறும் போதும் குறித்த 5 வருடத்தின் EPF இனையும் பெற்றுக்கொள்ளலாம்" இது புதிய விடயம் ஒன்றல்ல என்பதாக அவர் தெரிவித்தார்.