ad

பாடசாலை மாணவர்கள் சீருடையில் ​செல்வது கட்டாயமில்லை என கல்வி அமைச்சு அறிவிப்பு.



பாடசாலை செல்கின்ற மாணவர்களுக்கு பாடசாலை சீருடை அல்லது வேறு ஏதேனும் பொறுத்தமான ஆடை மற்றும் பாதணிகளுடன் பாடசாலைக்கு சமூகமளிக்கலாம் என்பதாக கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (பாடசாலை அலுவல்கள்) எல்.எம்.டீ தர்மசேன தெரிவித்ததாக லங்காதீப செய்தி வௌியிட்டுள்ளது. 

மாணவர்கள் ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காமல் இருந்தமை மற்றும் வீட்டிலேயே தங்கியிருந்தமை போன்ற காரணங்களால் அவர்களது உடலின் அளவு மற்றும் கால்களின் அளவுகளில் வளர்ச்சி ஏற்பட்டு ஏற்கனவே பயன்படுத்திய உடைகள் மற்றும் பாதணிகளை அணிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். அத்துடன் அவர்களுக்கு அவசரமாக புதிய பாடசாலை சீருடைகள் பாதணிகள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் பெற்றோருக்கு பொருளாதார நெருக்கடிகள் காணப்படலாம் என்ற அடிப்படையிலான காரணங்கள் குறித்து கவனம் செலுத்தி மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக திரு தர்மசேன தெரிவித்தார். 

பாடசாலைகள் ஆரம்பமாகும் தினம் (25) முதல் அடுத்த அறிவித்தல் வழங்கப்படும் வரையில் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகவும் இது தொடர்பில் கல்வி அமைச்சு மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்திருப்பதாகும் அவர் மேலும் தெரிவித்தார்.