ad

ஆசிரியர்கள் எதற்காகப் போராடுகின்றார்கள் -



சின்னையா இரவீந்திரன்
செயலாளர் - மலையக ஆசிரியர் முன்னணி

2019-ஆம் ஆண்டு கொவிட் பரவல் இலங்கையில் பரவ ஆரம்பித்து திடீரென்று பாடசாலைகளை மூடவேண்டிய சூழ் நிலை எழுந்தபோது ஆசிரியர்களில் பெரும்பாலானோர் அதிர்ந்து போயினர். மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய சூழ்நிலை இல்லாமால் போனதையிட்டு வெகுவாகவே வேதனைப்பட்டனர். ஏனெனில் தமது மாணவர்களின் உண்மையான கல்வி நிலை, அந்த ஆசிரியர்களுக்கே தெரியும். அதில் மாணவர்களின் குடும்ப சூழல், பொருளாதார பின்னணி இன்னோரன்ன பிரச்சினைகள் எல்லாம் அடங்கும்.


     எனவே நேரடியாக கற்பிக்க கூடிய சூழல் தடைபட்டு போனதும் இவ்வாசியர்கள் தாமாகவே முடிவெடுத்து எவர் வற்புறுத்தலுமின்றி சுயமாக புலனம்  வழியாக கற்பிக்க கூடிய ஒரு சூழலை !ஏற்படுத்திக்கொண்டனர். கொவிட்டின் காலம் அதிகரிக்க தொடங்கிய போதும் இணையவழியில் கற்பிக்கக்கூடிய தேவை அதிகரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு அநேகர் குவியத்தினூடாக கற்பித்தலை மேற்கொண்டனர்.


அதுவரை காலமும் இது தொடர்பில் ஆக்கபூர்வமான எவ்வித ஒழுங்கமைப்பு களையும் மேற்கொள்ளாத அரசும், கல்வி அமைச்சும், கல்வி திணைக்களமும் தாமே இவ்வொழுங்கமைப்பை மேற் கொண்டாற் போன்ற ஓர் தோரணையில் ஆசிரியர்களை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்ததொடங்கியது.





    புலனத்தில் தாம் கற்பித்தவைகள் என்ன? மாணவர்களின் பங்குபற்றல்கள், அதன் விபரம், ஆசிரியர்கள் கற்பிக்கும் போது அவ்விணைப்புகளை கட்டாயமாக கோரிய வளவாளர்கள், அல்லது ஆசிரிய ஆலோசகர்கள், அல்லது பாடத்துக்கான உதவி கல்வி பணிப்பாளர்கள் உள் நுழைந்து அவதானித்தல் ஆசிரியர்களின் செயற்பாட்டை விமர்சித்தல், நேர அட்டவணை தயாரித்து ஆசிரியர்களை கட்டாயமாக ஈடுபடச் செய்தல் அப்படி செய்யாத ஆசிரியர்களை பகிரங்கப்படுத்தல் போன்ற பல தகவல் களை திரட்டி அதன் மூலமாக மட்டுமே சம்பள படி ஏற்றம் செய்யப்படும் என்ற தொனியில் ஆசிரியர்களை சங்கடத்துக்குள்ளாக்கியது என பல விடயங்களை ஏற்படுத்தியிருந்தனர்.ஏற்படுத்திக்கொண்டுமிருக்கின்றனர்.

கொவிட் காலப்பகுதியில் வீட்டிலிருந்து வெறுமனே சம்பளம் பெறுவதா? அது மாணவர்களுக்கும், இந்த சமூகத்துக்கும் நாம் செய்யும் துரோக மல்லவா, மேலும் இக்குழந்தைகளை நீண்ட நாட்களாக தொடர்பற்று விட்டு விட்டால் அவர்கள் எதிர்காலம் பாழா கிவிடுமே என்ற சுய உறுத்தலில் இவ்வாசிரியர்கள் தாமாக மேற்கொண்ட ஓர் ஒழுங்கமைப்பை கட்டுப்படுத்தி தமது முனைப்பாக காட்ட முயன்ற அரசாங்கம், இணைய வழியில் ஆசிரியர்கள் கற்பித்தலை மேற்கொள்ளுவதற்கு எவ்விதத்திலாவது முயற்சித்ததா? அதற்கான முறையான ஒரு செயலியை அறிமுகப்படுத்தியதா?  இலவச இணைய வசதிகளை செய்து கொடுத்துள்ளதா? சகல ஆசிரியர்களிடமுமே இணை யத்தில் இணைய கூடிய வசதிகள் உண்டா என்பதை பற்றி ஆராய்ந்ததா?
.
பொதுவாக ஆசிரியர்களின் கோரிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் பின்வரும் கருத்துக்களும் கேள்விகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
* ஆசிரியர்கள் ரூபாய் 50,000 க்கும் மேலான சம்பளத்தை எடுத்துக்கொண்டு இன்னும் வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயம்?
* இவர்கள் இவ்வளவு சம்பளத்தை எடுத்துக்கொண்டு வருடத்தில் முக்கால்வாசி நாட்கள் விடுகைகளையும் எடுத்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளுடன்
குடும்பம் நடத்துவதற்கு போதாது என்று எப்படி சொல்லலாம்?
* இவர்களைப் போன்று சம்பளம் எடுக் காமல் நாளாந்த கூலி வேலை செய்து நாலு ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு பலரும் குடும்ப நடத்துகின்றார்கள் தானே
* அநேகமான அரச உத்தியோகத் தர்கள் கணவனும் மனைவியுமாக அரசாங்க வேலை பார்ப்பவர்கள். அப்படிப் பார்த்தால் இருவருடைய மாதாந்த சம்பளம் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்குமேலே வருமே?
* முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளின்தூண்டுதலின் பேரில்தான் இவர்கள்இவ்வாறான ஆர்ப்பாட்டப்பேரணிகளைசெய்கின்றார்கள்.
* இதைவிட தனியார் கல்வி நிலையங்களில் கற்பிப்பதற்கான சம்பளம் எவ்வளவு வாங்குகின்றார்கள்?

ஆசிரியர்கள் வெறுமனே சம்பளத்துக்காக கற்பிக்கவில்லை. இன்று உயரிடத்திலிருக்கும் பலரும் யோசித்துப்பாருங்கள்,நிச்சயமாக யாரோ ஒரு ஆசிரியர் உங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு தாக்கத்தை செலுத்தியிருப்பார். ஆசிரியர்கள் அல்லாமல் வேறு அரச துறைகளில் சேவையாற்றும் அரச உத்தியோகத்தர்களின் சேவை தன்மை மாறுபட்டது. இலிகிதராக கடமை புரியும் ஒருவருக்கு காகிதாதிகள், எழுதுகருவிகள், முகாமைத்துவ உபகரணங்கள் மேலதிக வேலைநேர கொடுப்பனவுகள் என்பன வழங்கப்படுகின்றன.

ஆனால் ஆசிரியர்களுக்கு அவ்வாறு வழங்கப்படுவதில்லை சுண்ணக்கட்டி கரும்பலகை (பாதி சாயம் போனதாக விருக்கும்) மேசை, நாற்காலி! அதிலும் சில உடைந்தவைதான்) ஆசிரியர் வழி காட்டி புத்தகம் என்பனவற்றை தவிர அரசாங்கம் கற்பித்தல் உபகரணமாக அல்லது நிர்வாகத்திற்கு  போதுமானளவு காகிதாதிகளையாவது தருகின்றதா?

 நாம் இன்று நேற்றல்ல.1997 ஆம் ஆண்டிலிருந்து போராடுகிறோம். 1994 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவை இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் தகுதி அடிப்படையில் ஆசிரியர்கள் தரம் உயரும் பொழுது சம்பளமும் உ உயரக்கூடிய வகையில் சம்பளதிட்டமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் 1997 முதல் முதல் அறிமுகப்படுத்தப்பட்டபி.ஸி. பெரேரா சம்பள ஆணைக்குழுவின் அறிக்கையில் அதிபர், ஆசிரியர் சம்பளம் தவிர்ந்த ஏனைய துறைகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்டபோது அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை ஊழியர்கள் அனைவரது சம்பளமும் ஒரே அளவு திட்டத்தின் கீழ் வந்தன.

ஆனால் அதன் பிறகு வந்த பல்வேறு சம்பள குழுக்களால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. 97 ஆம் ஆண்டு முதல் எமக்கு கைநழுவிபோன சம்பளத்தின் அளவு இது.




இது 3/2016 சகல தரங்களுக்கும் அடிப்படை சம்பள படிமுறையும் சுபோதினி யோசனை அறிக்கைப்படியும் அடிப்படை சம்பளமாகும், அதே போன்று இலங்கை அதிபர் சேவை தரம் 3 இன் தற்போதைய சம்பளம் ரூபாய் 35280 ஆக உள்ளது. சுபோதினி பரிந்துரையின் படி அது ரூபாய் 47,615 ஆகும். ஆசிரியர் சேவை தரம் 2 இன் தற்போதைய சம்பளம் ரூ 40,040 ஆகும். பரிந்துரை ரூ 62,595. ஆசிரியர் சேவை தரம் 1 இன் தற்போதைய சம்பளம் ரூ 46,325 பரிந்துரை ரூ 76175 ஆகும்.

கொத்தலாவல சட்டமூலத்தை ஏன் எதிர்க்கிறோம் ?



உயர் கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தொழில்முறை தர நிலைகள் நிறுவனம் (உ+ம் SLMC, IESL ) பல்கலைக்கழக செனட் சபை மற்றும் கட்டுப் பாட்டுச் சபை இந்த அனைத்து நிறுவனங்களைய சபைக்குக் கொடுத்தால் எப்படி இருக்கும் ? அந்த சபையின் அதிகாரங்களை ஒரு சபைக்கு 10 உறுப்பினர்களில் 5 பேர் இராணுவ அதிகாரிகள், இருவர் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர்கள் , மிகுதி மூவரும் அரசியல் நியமனங்கள் எந்தவொரு தனியார் பல்கலைக்கழகத்திற்கும் இந்த சபையின் அனுமதியை பெற்று கொத்தலாவலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து பட்டம் வழங்கும் அந்தஸ்தை ( Degree Awarding Status ) பெற்றுக்கொள்ள முடியும்.

 பல்கலைக் கழகங்களுக்கு உள்ளே நடக்கும் எந்தவொரு எதிர்ப்பின் போதும் தமக்கு சரியானது என தீர்மானிக்கப்படுகின்றின் எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்து அடக்கிட பாதுகாப்பு அமைச்சருக்கு முழு அதிகாரம் உள்ளது 

காலங்காலமாக ஒவ்வொரு முறையும் ஆட்சியதிகாரத்துக்கு வரும் அரசாங்கங்கள் படிப்படியாக சில அடிப்படைகளில் கை வைத்து தான் வந்துள்ளன ஆனாலும் இலவசகல்வியையும், இலவச மருத்துவத்தையும் முழுமையாக அழிக்க முடியவில்லை. அதனால் தான் இந்நாடு ஓரளவேனும் மனிததன்மையோடு இருக்கின்றது. எனவே தான் இலவச கல்விக்கு குழி பறிக்கும் கொத்தலாவல சட்ட மூலத்தை எதிர்த்து நாம் குரல் கொடுக்கின்றோம். 

நாம் போராட்டத்தை தொடங்கி கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆனநிலையில் இவ்வரசாங்கம் இன்னமும் எமது போராட்டத்தை தட்டிக்கழிக்கவே பார்க்கின்றது.

5 ஆயிரம் ரூபாவை காட்டி ஏமாற்றப்பார்க்கின்றது. சுபோதினி அறிக்கையில் எமக்கு தரவேண்டியதாகக்கூறிய அளவிலும் பார்க்க மூன்றில் ஒன்றை உபகுழு தருவதாக சொன்னது ஆனால் தந்தது பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பங்கு மாத்திரமே.



மலையக ஆசிரியர் முன்னணி என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை களைவதற்கும் அவர்களுக்காக மட்டும் குரல் கொடுக்கவும் உள்ள ஒரு அமைப்பல்ல. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், இம்மண்சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஓர் அமைப்பு எனத் தான் இலவச கல்வி தொடர்பில் நாம் கூடிய கவனம் எடுகின்றோம். இலவச கல்வி என்ற பதம் பாவிக்கப்பட்டாலும் கூட கல்வி கற்பதற்கு ஒரு தொகை பணத்தை செலவிட்டே ஆகவேண்டும். அந்த நிலையில் தோட்ட மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்தையும் பார்த்துக்கொண்டு பிள்ளைகளை படிக்கவைக்கவும் போராடுகின்றனர். 

எனவேதான் ஆயிரம் ரூபாய் சம்பள போராட்டத்துக்கும் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தையும் மேற் கொண்டிருந்தோம். தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் எவரும் நமது ஒற்றுமையை சீர்குழைத்து விடாமல் ஓரணியில் திரண்டு நின்றால் மட்டுமே எம்மால் எமது இலக்கை நோக்கி செல்லமுடியும்.
“கல்வி ஒன்றே சமூகத்தை கடைத்தேற்றும் ஆயுகம்"

நன்றி வீரகேசரி - ஞாயிறு இதழ்.