ஆசிரியர்கள் அதிபர்களுக்கான கொடுப்பனவு தொடர்பாக அனைத்து ஆசியர்களுக்கும் அதிபர்களுக்கமான சுற்றுநிருபம் ஒன்று 2021.09.17 ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு.
2021.08.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளுக்கு அமைவாக நியமிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்குழுவின் சிபாரிசுக்கு அமைய 2021. நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின்போது ஆசிரியர் அதிபர் சம்பள முரன்பாட்டினை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அதுவரையில் பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்ட கடமைகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் அதிபர்களுக்காக செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 5000.00 வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் 2021 செப்டம்பர் மாதத்தில் கடமைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்காக இந்த கொடுப்பனவினை வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக உரிய பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் கடமையில் ஈடுபடுகின்ற அதிபர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அமைய ஆசிரியர் சேவை, அதிபர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றை வரையறுக்கப்பட்ட சேவையாக்குவதற்கான விதிமுறைகளை வௌிப்படுத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 2021.நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வௌியிடுவதற்கும், குறித்த விதிமுறைகளை 6 மாத கலத்துக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாக குறித்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"குறித்த கொடுப்பனவானது குறித்த ஆசிரியர் குறித்த காலப்பகுதியில் சேவையாற்றியதற்காக அதபரினால் சான்றுறுதிப்படுத்தபட்டு வலயக்கல்விக் காரியாலயத்தில் சமர்ப்பித்ததன் பின்னரே வழங்கப்படும் என்பதாக அறிவிக்கப்டுகின்றது.