ad

பாராளுமன்ற உணவகத்தின் உணவு விலைகள் அதிகரிப்பு



எரிவாயு, பால்மா, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பாராளுமன்ற அலுவலர்களின், ஊழியர்களின், பாராளுமன்றத்திற்கு வருகை தருகின்றவர்களின் உணவுக்கான விலை இம்மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாகக் குறிப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுக்கான விலைகள் அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதாக பாராளுமன்ற வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உணவு தொடர்பான செயற்குழுவானது கூட்டம் ஒன்றினை நடாத்தித் தீர்மானிக்கும் என்பதாக பாராளுமன்றத்திலிருந்து ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தின் அமர்வுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதால் உணவு தொடர்பான செயற்குழு இயங்க முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் பாராளுமன்றத்தின் உணவுக்கான கட்டணமானது 4 வருடங்களின் பின்னரே இவ்வாறு அதிகரிக்கப்படுகின்றது என்பதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த புதிய விலையின் அடிப்படையில் நிர்வாக உத்தியோகத்தர்களின் உணவுகளுக்காக ( நிர்வாக தரத்திலான உணவகத்தில்) மாதாந்தத் தொகையாக அறவிடப்படுகின்ற 400 ரூபா தற்போது 700 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. 

சாதாரண ஊழியர்களுக்கான (சாதாரண உணவகத்தில்) மாதாந்தக் கட்டணமாகக் காணப்பட்ட ரூபா 200 ஆனது புதிய விலைமாற்றத்தின் படி 400 ரூபா ஆக அதிகரிக்கின்றது. அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்காக ஒரு நேர உணவுக்கு அறவிடப்பட்ட 25 ரூபா ஆனது 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது


பாராளுமன்றத்தில் செய்தி பெறுவதற்காக வருகின்ற ஊடகவியலாளர்களுக்கான உணவுக்காக அறவிடப்படுகின்ற 70 ரூபாவானது 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். 

எரிவாயு, பால்மா, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதால் முன்னைய விலைகளில் உணவு வழங்க முடியாது என்பதால் இவ்வாறு அதிகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற உணவகத்தின் அலுவலர் ஒருவர் தொரிவித்துள்ளார். 

செய்தி மூலம் அருண